Thursday, April 05, 2018

அநீதியாக உங்களால் நீக்கப்பட்ட கொள்கை சகோதரன், Fazul Rahman.B

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

மாநில நிர்வாகிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

சகோதரர் அல்தாபி அவர்களுடன் சேர்ந்து ஜமாஅத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக காரணம் குறிப்பிட்டு என்னை நீக்கிய செய்தியை நான் பொதுத்தளத்தின் மூலம் அறிந்தேன். 

என்னை நேரில் அழைத்து விசாரிக்காமல் ஏன் இப்படி நடவடிக்கை எடுத்தீர்கள்? ஆதாரங்கள் இல்லாத காரணங்களைக் குறிப்பிட்டும் என்னை வெளியேற்றி இருக்கிறீர்கள். சம்மந்தப்பட்டவர்களை அழைத்து தீர விசாரிக்காமலும் கேள்விப்பட்டதை எல்லாம் நம்பியும் ஒரு முடிவெடுத்து மார்க்க வரம்புகளை மீறி இருக்கிறீர்கள். 

அத்துடன் நீக்கப்பட்ட செய்தியையும் முதலில் என்னிடம் தெரிவிக்காமல் பொதுத்தளத்தில் வெளியிட்டிருக்கிறீர்கள். ஒரு பேரியக்கத்தை நடத்தும் தலைமை நிர்வாகத்திற்கு இது அழகா?

தற்போதைய மாநிலத் தலைமையாகிய நீங்கள் சர்வாதிகாரத்துடன் செயல்பட்டு ஜனநாயகத்தின் அத்தனை மாண்புகளையும் காலில் போட்டு மிதித்து வருகிறீர்கள். 

காட்டு மிராண்டிக் கூட்டத்திற்கு நாகரீகத்தை கற்றுத் தந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ஆனால் நீங்களோ இதற்கு நேரெதிராக செயல்பட்டு வருகிறீர்கள். எதிர் விமர்சனம் செய்யும் யூதர்களையும் கூட அரவணைத்தே  ஆட்சி செய்தார்கள் நபியவர்கள். முன்மாதிரி அனைத்தும் மேடைப் பேச்சுக்களிலும், புத்தக வடிவத்திலும் மட்டுமே இருப்பது வருத்தமே. 

நம்மை எதிர்கேள்வி கேட்பவர் யார் என்ற உங்கள் ஆணவத்திற்கு இக்கடிதமே ஒரு சாட்சி. அல்லாஹ் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள். 

தகுதியற்றவர்கள் பொறுப்புக்கு வருவது கியாமத் நாளின் அடையாளம் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வும் அவனது தூதரின் வார்த்தைகளும் பொய்க்காது என்று நாம் உளமார நம்புபவர்கள். பக்குவமற்ற  நிர்வாகத் திறன் இல்லாத மாநிலத் தலைமைக்கு நான் இப்போதும் கட்டுப்படுகிறேன்.

நமது இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து நீக்கிய பின்னர் வழக்கம்போல் கொள்கையிருந்து வெளியேறியதாக விமர்சிக்கும் ஆயுதத்தை கையில் எடுத்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். அதை தம் முழு நேரத் தொழிலாக செய்யும் (அதிகாரப்பூர்வமற்ற) உங்களின் சில கைத்தடிகள் பார்த்துக் கொள்வார்கள். 

கீழ்மட்டம் மட்டுமின்றி மாவட்ட அளவிலும் சுய சிந்தனையற்ற பெயரளவுக்கு பொம்மை நிர்வாகிகளை அமைத்து செயல்படுவது எதிர்காலத்தில் நம் ஜமாத்துக்கு பின்னடைவாக அமையும் என்ற அபாயத்தை உணருங்கள். 

நம் உழைப்பையும் ரத்தத்தையும் உறிஞ்சி விட்டு துரோகிகள் என்ற பட்டத்துடன் வெளியேற்றிய உங்கள் நிர்வாகத் தலைமையைக் கண்டு நான் உண்மையில் மெய் சிலிர்க்கிறேன். நமது உழைப்புக்கும் எண்ணத்திற்கும் ஏற்ற கூலியை அல்லாஹ் வழங்குவான் என்ற நம்பிக்கை மட்டும் எமக்கு இல்லாவிட்டால் நாமும் இதை வேறு ஒரு வகையில்  - நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பதன் மூலம் எதிர்கொண்டிருப்போம். மறுமைக்காக எமது உழைப்பை நாம் சேமித்து வைத்துள்ளோம். அதை பன்மடங்கு பெருக்கி அல்லாஹ் எனக்கு வழங்குவான் என்ற நம்பிக்கையில் உங்களை நாம் அலட்சியப்படுத்துகிறோம்.

எதிர்காலத்திலாவது மாநிலத் தலைமை அனைவரையும் அரவணைத்து, அவர்களின் நியாயமான கருத்துக்கு செவி சாய்த்து காழ்ப்புணர்ச்சி இன்றி திறம்பட செயலாற்ற வேண்டும் என்றும் தாவாக்களில் கூடுதல் கவனம் செலுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்தவர்களாக இக்கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

“மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!” என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினார். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன். என்று அவர்கள் கூறினர். – அல்குர்ஆன் 3:173

இப்படிக்கு,
அநீதியாக உங்களால் நீக்கப்பட்ட கொள்கை சகோதரன்,
Fazul Rahman.B
திருச்சி மாவட்டம்.

No comments: