Friday, October 06, 2006

அண்ணன் அன்று எழுதியது வேத வாக்கா? இன்று ஓட்டுப் பிச்சைக் கேட்டு தெருத் தெருவாய் சொன்னது வேத வாக்கா?
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
ஏ தாழ்ந்த தமிழகமே!
தேர்தல் வரப்போகிறது! நம்மை ஆளப்போகின்றவர்களை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்! தேர்ந்தெடுப்பதற்கான தகுதிகளை நாம் முன்பே நிர்ணநித்து விட்டோம். கைலியை மடித்துக் கட்டத் தெரிய வேண்டும்! தேவைப்பட்டால் அதை சட்டசபையில் அவிழ்த்துக் காட்டவும் தெரிந்திருக்க வேண்டும்! கட்டிப்புரளத் தெரிய வேண்டும்! குத்துச்சண்டையும் தெரிய வேண்டும்! பேப்பர் வெயிட்டுகளை எடுத்துக் குறிபார்த்து எறியத் தெரிய வேண்டும் சிறப்புத் தகுதியாக அகராதியில் இல்லாத வார்த்தைகளில் அதிக புலமை இருக்க வேண்டும். இந்தத் தகுதி உள்ளவர்களை நம்மை ஆள்வதற்கு நாம் தேர்வு செய்யப் போகிறோம். நமக்குதான் இதில் முன் அனுபவம் நிறைய உண்டே!

நம்மை ஆளப் போகிறவர்கள் தங்கள் தகுதிகளை இப்பொழுதே மேடைகளில் காட்டத் துவங்கிவிட்டனர். 'உனக்கு நடிக்கத் தெரியுமா? பாட்டுப்பாடத் தெரியுமா? வசனம் எழுதத் தெரியுமா? அடேய் நீ தமிழனா? உனக்கு ஆங்கிலம் பேசத் தெரியுமா? குரங்கு மூஞ்சி! உன்னிடம் அழகு இருக்கிறதா? பனைமரம்! வழுக்கைத்தலை! கோட்டான்! என்றெல்லாம் அரசியல் மேடைகள் களைகட்டிவிட்டன.

'அண்ணாவின் ஆட்சியை அமைப்போம்! புரட்சித் தலைவர் ஆட்சித்தான் அமையும்! காமராஜரின் ஆட்சியை அமைத்தே தீருவோம்!' என்று எதிர்கால திட்டங்களை எடுத்துவைக்க துவங்கிவிட்டனர். ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி போடுவோம் என்று அரியணை ஏறி மூன்றுபிடி அரிசி கூட தரமுடியாதவர்களின் ஆட்சியை அமைக்கப் போகிறார்களாம். தாய்மேல் ஆணையிட்டு கள்ளுக்கடைகள் மூடி, பின்னர் திறந்து, பின்னர் மூடி, பின்னர் தளர்த்தி மொத்த சமுதாயத்தையும் முட்டாளாக்கியவர்களின் ஆட்சியை அமைக்கப் போகிறார்களாம். அவுன்ஸ் கணக்கில் அரிசி வழங்கி, போதாவிட்டால் எலிக்கறியைச் சாப்பிடுங்கள் என்று போதித்த புண்ணியவான்களின் ஆட்சியை அமைக்கப்போகிறார்களாம். செத்து விட்டவர்கள் செய்த அக்கிரமங்களை மக்கள் மறந்திருப்பார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

எனக்கு ஆட்சியில் பங்கு உண்டா? வாரியத்தில் இடமுண்டா? கொள்ளை அடிப்பதில் எனக்கு எவ்வளவு? என்ற பேரங்களை சமுதாயக் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. சமுதாயமாவது! மண்ணாங் கட்டியாவது. பதவி நாற்காலியில் அமர வேண்டுமென்ற இலட்சியம் (?) என்னாவது?

இப்படி களைகட்டிவிட்ட 'தேர்தல்' முடிந்தபின் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடத்தான் போகிறது. எல்லாரும் எல்லாமும் பெறத்தான் போகிறோம், இப்படித்தான் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

தேர்வு செய்து அனுப்புகின்ற நம்மைவிட, அரசியல்வாதிகள் ஒழுக்கத்திலோ, நேர்மையிலோ எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் இல்லை என்பதை இனியேனும் உணரமறுத்தால் 'ஏ தாழ்ந்த தமிழகமே!' என்று உலகம் காரி உமிழ்வதை எவரும் தடுக்க இயலாது.
நன்றி: 1988 மே அல் ஜன்னத் நுழைவாயில்!
இதனை கம்யூட்டரில் டைப் செய்து அனுப்பித் தந்த செல்வன் முஃமின் பில்லாஹ் அவர்களுக்கு அல்லாஹ் அவர்களுக்கு புரிவானாக. ஆமீன்.

அண்ணன் அன்று எழுதிய வேத வாக்கு.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்ரஹீம்
உங்கள் பொன்னான வாக்குகள்!

இதோ வரப்போகிறது. அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் (?) எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது! செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுயர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்! மின்னல் வேக சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்! இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது!

எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்! வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்ன தான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கரை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்!

யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை! அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிர்ப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது? இதோ அல்லாஹ் சொல்கிறான்.

யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்த தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். (அல் குர்ஆன் 4:85)

நல்ல காரியத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டாம். (அல் குர்ஆன் 5:2)

வட்டியும், மதுவும், சூதும், லஞ்சமும், ஊழலும், ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை.
நன்றி:ஜனவரி 1989அல் ஜன்னத் நுழைவாயில்
அண்ணன் அன்று எழுதியது வேத வாக்கா இன்று சொல்வது வேத வாக்கா?
இதனை கம்யூட்டரில் டைப் செய்து அனுப்பித் தந்த செல்வி ரஜா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.