Wednesday, February 21, 2018

அகீகாவின் சட்டங்கள்...!!

அகீகாவை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் இது கட்டாய கடமை (பர்ளூ) அல்ல சுன்னத்தான வழிமுறை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உணவுக்கே வழியில்லாத ஏழைகள் கூட குழந்தை பிறந்ததும் வட்டிக்கு வாங்கியாவது ஆடு அறுத்து கறி பரிமாறனும் என நினைத்துக் கொண்டிருக்க்கிறார்கள் மார்க்க அறியாமையின் காரணத்தால்.

குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆண்குழந்தையாக இருந்தால் அதற்காக இரண்டு ஆடுகளையும், பெண்குழந்தையாக இருந்தால் அதற்காக ஓரு ஆட்டையும் அறுத்து ஏழை எளியவர்களுக்கும் உறவினர்களுக்கும் உணவளிப்பதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது.

இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். ஆனால் கடமையாக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பையன் (பிறந்த) உடன் அகீகா (கொடுக்கப்படல்) உண்டு. ஆகவே அவனுக்காக (ஆடு அறுத்து) குர்பானி கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிவிடுங்கள் என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.

அறிவிப்பவர் : சல்மான் பின் ஆமிர் (ரலி)

நூல் : புகாரி (5472)

எத்தனை ஆடுகள் அறுக்க வேண்டும்?

நபி (ஸல்) அவர்களிடம் அகீகாவைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மாறுசெய்வதை நான் விரும்ப மாட்டேன். யாருக்கேனும் குழந்தை பிறந்து அதற்காக அவர் (ஆட்டை) அறுத்து வணக்கம் புரிய விரும்பினால் அவர் ஒரே மாதிரியான இரண்டு ஆடுகளை ஆண் குழந்தைக்காகவும் ஒரு ஆட்டை பெண் குழந்தைக்காகவும் கொடுக்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : அஹ்மத் (6530)

விரும்புபவர் அகீகா கொடுக்கட்டும் என்று மேலுள்ள ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அகீகா கொடுப்பது கடமையில்லை. கொடுப்பது சிறந்தது என்பது அறிந்து கொள்ளலாம்.

ஆண்குழந்தைக்காக ஓரு ஆட்டை அறுத்துப் பலியிடுவதற்கும் ஆதாரம் உள்ளது. இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹஸனுக்கும், ஹுஸைனுக்கும் ஒரு ஆட்டை அகீகாவாக தந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அபூதாவூத் (2458)

பெற்றோருக்கு பதிலாக மற்றவர்கள் கொடுக்கலாமா?

பெற்றோருக்குப் பதிலாக குழந்தையின் உறவினர்கள் அகீகாவை நிறைவேற்றுவதற்கு அனுமதி உள்ளது. பெற்றோர்கள் தான் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை.

குழந்தைக்காக ஆடு அறுக்கப்படும் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெற்றோர்கள் தான் அகீகா கொடுக்க வேண்டுமென்றால் குழந்தையின் பெற்றோர்கள் அறுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள்.

ஓவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி)

நூல் : அபூதாவூத் (2455)

மேலும் அலி (ரலி) ஃபாத்திமா (ரலி) ஆகிய இருவருக்கும் பிறந்த ஹஸன் மற்றும் ஹுஸைன் (ரலி) அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்துள்ளார்கள். குழந்தையின் உறவினர்கள் யார் வேண்டுமானலும் அகீகா கொடுக்கலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸன் மற்றும் ஹுஸைன் (ஆகிய இருவருக்காக) அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : நஸயீ (4142)

அகீகா கொடுப்பவர் இறைச்சியை உண்ணலாமா?

அகீகா கொடுப்பவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஹஜ்ஜுப் பெருநாளன்று அறுக்கப்படும் குர்பானிப் பிராணியின் இறைச்சியை குர்பானி கொடுப்பவர் உண்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதிக்கவில்லை. குர்பானியும், அகீகாவும் இறைவனுக்குச் செலுத்தப்படுகின்ற வணக்கமாக இருப்பதால் இவை இரண்டுக்கும் ஒரே வகையான சட்டம்தான்.

ஹஜ்ஜின் போது அறுக்கப்படுகின்ற பிராணியை அறுப்பவர்கள் தானும் உண்டு ஏழை எளியவர்களுக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான் இவ்வாறே அகீகா விஷயத்திலும் நடந்துகொள்ள வேண்டும்.

அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

அல்குர்ஆன் (22 : 28)

ஏழாவது நாளுக்குப் பிறகு அகீகா கொடுக்க தேவையில்லை

அகீகா என்பது குழந்தை பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. 

பெற்றோர்கள் தனக்கு அகீகா கொடுக்காததால் பெரியவராக ஆன பின்பு தனக்குத் தானே அகீகா கொடுக்கலாமா? என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் எதுவும் இல்லை.

அகீகா என்ற வணக்கம் குழந்தை பிறந்து ஏழாவது நாள் செய்யப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அன்று தான் இவ்வணக்கத்தைச் செய்ய வேண்டும். இந்த நாளைக் கடந்த பிறகு கொடுத்தால் அது சாதாரண தர்மமாக ஆகும். அகீகா கொடுப்பதற்குரிய நன்மை கிடைக்காது.

அகீகா கடமையில்லாத காரணத்தினால் கடமையானவைகளை பின்பு நிறைவேற்றுவதைப் போன்று இதை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் தனக்காகவோ அல்லது அவர்களது தோழர்களுக்காகவோ அகீகா கொடுக்கவில்லை. நபித்தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இந்தப் புதிய வழிமுறையை நாம் ஏற்படுத்க்கூடாது.

பெயர் வைத்தலும் முடியைக் களைதலும்

அகீகா கொடுக்கும் போதே குழந்தைக்குப் பெயர் வைத்து அதன் முடியைக் களைவது நபிவழியாகும்.

ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆடு) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜன்துப் (ரலி)

நூல் : அபூதாவூத் (2455)