Thursday, August 16, 2018

பீஜே ஒரு கோடி ராயல்டி கேட்டாரா?

P. Jainulabideen - பீ.ஜே
பீஜே ஒரு கோடி ராயல்டி கேட்டாரா?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழுவில் பீஜே அவர்கள் தனது நூல்களை ஒப்படைக்க ஒரு கோடி ரூபாய்கள் ராயல்டி கேட்டதாக கலீல் ரசூல் இழிவுபடுத்தும் தோரணையில் பேசி மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்துப் பேசியுள்ளார்.
ஜமாஅத்தை வைத்து பீஜே அவர்கள் எந்த பொருளாதார ஆதாயமும் அடையவில்லை என்பதை கலீல் ரசூலும் இப்போது ஜமாஅத்தை அனுபவித்து வருபவர்களும் நன்றாக அறிவார்கள். ஆனாலும் பீஜேயின் மீது வெறுப்பை விதைத்தால் தாங்கள் உத்தமர்களாக கருதப்படலாம் என்ற கெட்ட நோக்கத்தில் தான் இவ்வாறு மாநில நிர்வாகிகள் பொதுக்குழுவில் விஷக்கருத்தை விதைத்துள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை.
தமுமுகவில் இருந்து பிரிந்த போது எந்த நிதியாதாரமோ கிளைகளோ கட்டமைப்போ இருக்கவில்லை.
அந்த நேரத்தில் ஜமாஅத்துக்கு பீஜேயின் சீடிகள் விற்பனை மூலம் தான் பெரிய அளவில் வருவாய் கிடைத்தது.
மேலும் ஜமாஅத்துக்குச் சொந்தமில்லாத உணர்வு பத்திரிகை பீஜேயின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அதில் இருந்து கிடைக்கும் வருமானமும் ஜமாஅத்தின் நிதியாதாரத்துக்கு உதவிகரமாக இருந்தது.
மேலும் ரமலானிலும் மற்ற நாட்களிலும் பீஜேயின் உரைகளை தனியார் தொலைக்காட்சியில் பீஜே தனிப்பட்ட முறையில் ஒளிபரப்பினால் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதன் விளம்பர வருவாயை அவரே எடுத்துக் கொண்டு இருக்க முடியும். ஆனாலும் இதன் வருவாய் ஜமாஅத்துக்குச் சேரட்டும் என்று அவர் சொன்னதால் அதன் மூலம் கிடைத்த வருவாய் ஜாமாஅத் முடங்கிவிடாமல் இருக்க உதவியது.
இப்படி பல வகைகளில் தானே எடுத்துக் கொண்டாலும் யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலையில் தனக்கு உரித்தாக்கிக் கொள்ள முடிந்த நிதிகளை ஜமாஅத்துக்கு கிடைக்கச் செய்தார்.
இன்று ஜமாஅத்துக்குப் பல கோடி ரூபாய்கள் இருப்பு உள்ள நிலையில் இது சின்ன வருவாயாகத் தோன்றலாம். ஆனால் அன்றைக்கு இருந்த நெருக்கடியான சூழலில் இந்த நிதியும் இரண்டு நல்ல மனிதர்களின் நன்கொடையும் தான் ஜமாஅத்தைத் தூக்கி நிறுத்தியது.
அப்படிப்பட்ட மனிதன் மீது ஒரு கோடி ரூபாய் ராயல்டி கேட்டதாக கள்ள ஐடி புகழ் கலீல் ரசூல் பழி சுமத்தி உள்ளார். பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாஹு அக்பர் என்று முழங்கி உள்ளனர்.
பீஜேயிடம் இது குறித்து ஒட்டு மொத்த மாநில நிர்வாகம் பேசவில்லை. கலீல் ரசூலும் சாதிகும் தான் பேசினார்கள். என்ன பேசினார்கள் என்பதை அவர் நிர்வாகத்தில் தன்னிஷ்டத்துக்கு தவறாக சொல்லி உள்ளார். அதையே மாநில நிர்வாகத்திலும் சொல்லி உள்ளார்.
பொய் சொல்வதற்கு பேர் பெற்ற அந்த ஒருவர் சொன்னதை மக்கள் அப்படியே நம்புகிறார்கள்.
முதலில் ராயல்டி என்றால் என்ன? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் ஒரு நூலை எழுதுவதற்காக பல நாட்கள் அல்லது மாதங்கள் உழைத்து எழுதுகிறார். அதை அவர் வெளியிடாமல் ஒரு நிறுவனத்தில் வெளியிடக் கொடுத்தால் அதற்காக அதன் மொத்த விலையில் பத்து சதவிகிதம் ராயல்டி வாங்கிக் கொள்வது வழக்கத்தில் உள்ளது.
ஜமாஅத் அறிஞர்கள் அனைவரும் இவ்வாறு ராயல்டி வாங்கிக் கொண்டு பல நூல்களை வெளியிட்டுள்ளனர். ஜமாஅத் சார்பில் வெளியிட்ட சில நூல்களுக்கும் ராயல்டி கொடுத்து வருகின்றனர்.
இதை மனதில் வைத்துக் கொண்டு கலீல் ரசூல் சொன்ன விஷயத்துக்கு வருவோம். திருச்சி செயற்குழுவில் பீஜேயின் நூல்களை அறிஞர் குழு சார்பில் வெளியிடுவோம் என்று அறிவித்தார்கள். இப்படி அறிவிப்பதற்கு முன் இது குறித்து யாரும் பீஜேயிடம் பேசவில்லை.
ஒரு நூலை ஒருவர் எழுதினால் அதன் வெளியீட்டு உரிமை அவரைச் சேர்ந்தது. அதை மற்றவர்கள் வெளியிட உரிமை இல்லை. அதிகாரமும் இல்லை. இந்தச் சாதாரண விஷயத்தைக் கூட அறியாமல் இப்படி அறிவித்தனர்.
இப்படி அறிவிப்பு செய்த பிறகுதான் பீஜேயிடம் இது பற்றி பேசவேண்டும் என்று கூறி பீஜேயின் வீட்டுக்கு கலீல் ரசூலும் சாதிக்கும் வந்தனர்.
அப்போது நடந்த பேச்சு வார்த்தை குறித்து தான் கலீல் ரசூல் பொய்களைக் கூறி உள்ளார்.
மூன் பப்ளிகேசன் ஸ்டாக்கில் உள்ள நூல்கள், வழக்கமான ஜமாஅத் வழங்கும் ராயல்டி அடிப்படையில் அனைத்து நூல்களையும் நீங்களே வாங்கிக் கொள்ளலாம். இதற்கு ஒரு கோடிக்கு மேல் ஆகும்; ஸ்டாக்கை கணக்குப் பார்த்து அதை தீர்மானித்துக் கொள்வோம் என்று தான் பீஜே தரப்பில் கூறப்பட்டது.
மூன் பப்ளிகேசன் ஸ்டாக் நூல்கள் கீழ்க்கண்டவாறு இருக்கலாம்.
திருக்குர்ஆன் தமிழாக்கம் பத்தாயிரம் பிரதிகள் கையிருப்பில் இருந்தால் ஒரு பிரதிக்கு 400 என்ற அடிப்படையில் அதற்கான தொகை 10000×400=4000000 நாற்பது லட்சம் ரூபாய்கள் ஆகலாம்
முஸ்லிம் அல்லாதவர்களுக்காக திருக்குர்ஆன் மலிவுப் பதிப்பு 200 ரூபாயில் போடப்பட்டது. இந்தப் பிரதிகள் பத்தாயிரம் ஸ்டாக் இருந்தால் 10000×200=2000000 (இருபது லட்சம் ரூபாய்கள்) ஆகலாம்.
90 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்கள் உள்ளன. 90 தலைப்புகள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு தலைப்பில் 2000 நூல்கள் கையிருப்பாக இருந்தால் 180000 ஒரு லட்சத்து எண்பதாயிரம் பிரதிகள் ஆகிறது.
பல தரப்பட்ட விலைகளில் நூல்கள் உள்ளன. சராசரியாக ஒரு பிரதிக்கு 30 ரூபாய்கள் என்று வைத்துக் கொண்டால் 180000×30=5400000 (ஐம்பத்து நான்கு லட்சம் ரூபாய்கள்) ஆகும்.
உத்தேசமாக இந்தக் கணக்குப் படி ஒன்றே கால் கோடிக்கு நெருக்கமாக இருப்பு இருக்கும் போது பீஜே ஒரு கோடி எப்படி கேட்டிருப்பார்?
மேலும் ராயல்டி என்பது குருட்டாம் போக்கில் ஒரு கோடி இரு கோடி என்று அறிவுடைய யாரும் சொல்ல மாட்டார்கள்.
அப்படிச் சொன்னால் அறிவுடைய யாரும் அதைக் கேட்டுக் கொண்டு போக மாட்டார்கள்.
எப்படி ஒரு கோடி என்று கேட்டிருப்பார்கள். அப்படி கலீல் ஏன் கேட்கவில்லை. அந்த அளவுக்கு விவரமற்றவரா?
அத்துடன் உங்கள் பெயரை நீக்கி விட்டு அறிஞர் குழு என்று போடுவோம் என்று கலீல் கேட்டார்.
இது அறிவீனமானது; செயற்குழுவில் நீங்கள் அறிவித்த பின்னர் நாக்கைப் பிடுங்குவது போல் முக நூலில் கேட்கிறார்கள். யார் பெத்த பிள்ளைக்கு யாருடைய இன்ஷியலைப் போடுவது என்றும் மக்கள் கேட்கிறாரகள் என்று பீஜே கூறியிருக்கிறார்.
அறிஞர் குழு அதை எழுதாமல் இருக்கும் போது அறிஞர் குழு எழுதியதாக பொய் சொல்லி தாவா செய்ய அனுமதி உண்டா என்றும் பீஜே கேட்டிருக்கிறார்.
அவர்கள் சென்ற பின்னர் வீட்டில் குடும்பத்தார் மஷ்வரா செய்து நாம் எல்லா புத்தகங்களையும் ஜமாஅத்தில் விற்று விட்டால் பித்னா செய்வார்கள். எனவே இந்த டீலிங் வேண்டாம் என்று முடிவு செய்து மறுநாள் காலையில் போன் போட்டு சாதிக் அவர்களிடம் மொத்தமாக நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டாம்; ராயல்டி அடிப்படையிலும் வேண்டாம் என்று பீஜே தரப்பில் சொல்லப்பட்டு விட்டது.
ஆனால் சில மாதங்கள் கழித்து பொதுக்குழுவுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் மீண்டும் ராயல்டி அடிப்படையில் எடுத்துக் கொள்வது சம்மந்தமாக பேசிய போது பீஜேயின் மைத்துனர்கள் இதில் உடன்பாடு இல்லை என்று சொல்லி விட்டார்கள். காசுக்காக எல்லா உரிமையையும் விட்டுக் கொடுத்தார்கள் என்ற அவப்பெயர் வேண்டாம் என்று கூறிவிட்டனர்.
ஆனால் ராயல்டியாக பீஜே ஒரு கோடி கேட்டார் என்று நிர்வாகிகள் திட்டமிட்டு பீஜே பெயரைக் கெடுக்க புளுகியுள்ளனர்.
பீஜேயின் திருக்குர்ஆன் தமிழாக்கம் உருது மொழியில் வெளியிட தவ்ஹீத் ஜமாஅத்தில் கொடுத்துள்ளார்கள். அதற்காக பீஜே ஒரு பைசாவும் ராயல்டி கேட்கவில்லை. ஜமாஅத் தான் அதன் முழு ஆதாயத்தையும் அடைந்து வருகிறது.
பீஜேயின் நூல்களை இலவசமாக வெளியிட சவூதி ஜாலியாத்தில் இருந்து அனுமதி கேட்டார்கள். இதற்காக ராயல்டி கொடுக்கும் வழக்கம் சவூதி ஜாலியாத்தில் இருந்தாலும் பல லட்சங்கள் கிடைக்க வாய்ப்பு இருந்தும் ராயல்டி ஏதுமில்லாமல் பீஜே அனுமதி வழங்கினார்.
இதெல்லாம் தெரிந்திருந்தும் பொய்யான காரணம் கூறி பீஜேயை அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கியது போல் எப்படியாவது பீஜே மீது வெறுப்பை ஊட்டி தங்களை நிலை நாட்டிக் கொள்வதற்காகவே ஒரு கோடி ராயல்டி மேட்டர்.
ஒரு கோடி கேட்டார்; கட்டுபடியாகாது என்று கூறி விட்டோம் என்று கலீல் கூறியது உண்மை என்றால் அத்துடன் பேச்சுவார்த்தை மூடிந்து இருக்க வேண்டும்.
அதன் பிறகு மீண்டும் கேட்டோம்; தர மறுத்து விட்டார்கள் என்கிறார்.
கலீல் துவக்கமாக சொன்னது உண்மையானால் இரண்டாவது தடவை பேச வேண்டி வருமா?
பீஜே கேட்ட தொகைக்கு ஜமாஅத் மறுத்தது உண்மை என்றால் அடுத்த பேச்சு வார்த்தை மூன் பப்ளிகேசன் சார்பில் தான் வந்து இருக்க வேண்டும். ஆனால் ஜமாஅத் தான் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வந்தது?
ஜமாஅத் தரப்பு ஒரு கோடிக்கு மறுத்து விட்டால் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு ஜமாஅத் அழைத்திருக்க முடியாது.
பீஜே தான் அழைத்து இருக்க வேண்டும்.
ஆனால் ஜமாஅத் தான் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.
அப்படியானால் பீஜே ஒரு கோடி ராயல்டி கேட்கவும் இல்லை; ஜமாஅத் தரப்பில் மறுக்கவும் இல்லை. அதனால் தான் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வந்தார்கள்.
கலீலின் முரண்பாட்டை வைத்து உண்மையைக் கண்டறியலாம்.
சிந்தித்து ஆராயும் ஜமாஅத் சகோதாரர்கள் எப்படி இதை நம்பினார்கள்? என்பது தான் வியப்பாக உள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------
பழசும் புதுசும் 




No comments: